#மக்கள்கவிஞர்பட்டுக்கோட்டையார்
அனைவருக்கும் வணக்கம்…
சமூகத்தை, அரசியலை, தத்துவத்தை ஏழைகளின் மொழியில் பாடல்களாய் விதைத்த அலங்காரச் சொற்களைப் பயன்படுத்தாத அற்புதமானவர் நமது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நமது ‘செங்கபடுத்தான்காடு’ கிராமத்தில் பிறந்து, 1959 அக்டோபர் 8ஆம் தேதி தன் 29-வது வயதில் மறைந்த மக்கள் கவிஞர் அவர்கள் சொல்லாத தத்துவம் இல்லை. பாடாத அறிவுரை இல்லை. எழுதாத காதல் இல்லை. அவர் இல்லாமல் தமிழ் பாடல்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு சமுதாயத்தோடு ஒன்றிப்போனவர் கவிஞர் ஐயா அவர்கள்.
“சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா.”
“காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்”
“வசதி படைச்சவன் தரமாட்டான் வயிறு பசிக்கறவன் விடமாட்டான்”
“தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே”
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலமடா”
“திருடாதே பாப்பா திருடாதே”
“இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும் கூட்டிருக்குது கோனாரே இத ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே…”
என்று எழுதப்படிக்கத் தெரியாத தமிழ்நாட்டின் கடைகோடி தமிழனுக்கும் பொதுவுடைமையைப் போதித்த பட்டுக்கோட்டை படித்ததோ சொந்த ஊர் திண்ணைப்பள்ளியில் இரண்டு மூன்று ஆண்டுகள் அடிப்படைக் கல்வி அளவுதான். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் விவசாயம் முதன்மைத் தொழிலாயிற்று. மாடுமேய்த்தல், மீன் பிடித்து விற்றல், மாடுவியாபாரம், கீற்று வியாபாரம், மாம்பழ வியாபாரம் போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கவிஞரின் அப்பா அருணாசலம் பிள்ளை பொதுவுடமைச் சிந்தனை கொண்டவர் கவிஞரும் ஆவார். பொதுவுடமை சிந்தனை நிறைந்த குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்ததால் அவரால் தொழிலாளர்களின் வலியை, கோபத்தை, நியாயத்தை, மிக அழுத்தமாகப் பதிவு செய்ய முடிந்தது. ஆயிரமாயிரம் காலத்துக்கும் தேவையான சிந்தனைகளை சினிமா பாடல்களின் மெட்டுக்குள் அடக்கிய அவரின் திறன் இன்று வரை யாருக்கும் கை வரவில்லை என்று அடித்துச் சொல்லலாம்.
எம்.ஜி.ஆர் ஏழைகளின் நாயகன் ஆனதற்கும் தமிழகத்தின் முதலமைச்சரானதற்கும் பட்டுக்கோட்டையின் பாடல்கள் மிகப்பெரிய காரணம். “என்னுடைய நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடையது” என்று எம்.ஜி.ஆரே மனம் திறந்துசொல்லி இருக்கிறார்.
சினிமாத் துறைக்குள் நுழைவது இன்றுபோல் அன்று எளிதானது அல்ல. பட்டுக்கோட்டை சினிமா ஆசையில் சென்னை வந்து நாடகத்துக்குத்தான் முதன்முதலில் பாட்டெழுதினார். நாடகத்திலேயே அவர் பொதுவுடமை வேட்கை ஆரம்பமாகிவிட்டது,
“தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது
ஆனாலும், மக்கள் வயிறு காயுது…”
என்ற பாடல் மூலம் பிரபலமானார். பட்டுக்கோட்டை சினிமாவுக்கு வந்த நேரத்தில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணன் போன்ற ஜாம்பவான்கள் திரைப்படப்பாடல்களில் கோலோச்சிக்கொண்டிருந்தனர். அந்த மலைகளுக்கு இடையில் மடுவாக நுழைந்த பட்டுக்கோட்டை, அடுத்த சில ஆண்டுகளில் அத்தனை ஜாம்பவான்களும் தன் நடையைப் பின்தொடரும் அளவுக்கு கூர்மையான வார்த்தைகளைக் கொண்டு பாடல் செய்தார். முதலாளிகளையும் அடிமைத் தனத்தையும் வார்த்தைகளால் குத்திக் கிழித்தார்.
சினிமா வாய்ப்புத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது பல இடங்களில் பட்டுக்கோட்டையை பார்க்காமலேயே விரட்டியடித்திருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவத்தால் கோபத்துக்குள்ளான பட்டுக்கோட்டை அந்த நிமிடத்தில் எழுதிய வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதனை பலநாட்கள் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாசவலை படத்தின் பாடல் கம்போஸிங்கில் இருந்த சமயத்தில் அவரிடம் பாட்டெழுத வாய்ப்பு கேட்டுச் சென்றிருக்கிறார் பட்டுக்கோட்டை. `பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று ஒருத்தர் வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார்’ என்று மேனேஜர் மூலம் எம்.எஸ்.விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, “நமக்கு நாள்கள் குறைவாகத்தான் இருக்கிறது. புது ஆட்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது. கண்ணதாசனையோ, மருதகாசியையோ எழுதச்சொல்லுங்க” என்று கோபமாக சொல்லி மேனேஜரை துரத்திவிட்டிருக்கிறார். அதே வேகத்தில் வந்து, “புது ஆட்களைப்பார்க்கும் எண்ணம் இப்போது இல்லையாம்” என்று எம்.எஸ்.வி மேனேஜர் பட்டுக்கோட்டையாரிடம் சொல்ல…
என்னைப்பார்க்க வேண்டாம். என் கவிதையை படிக்கச் சொல்லுங்கள்” என்று தன்னுடைய கவிதையை கொடுத்திருக்கிறார். மேனேஜரும் `இவன் புது டைப்பா இருப்பான் போலிருக்கே’ என்று யோசித்துக்கொண்டு. எம்.எஸ்.வியிடம் போயிருக்கிறார். “அய்யா… நீங்கள் கவிஞனை பார்க்க வேணாடாமாம். அவரது கவிதையைப் படித்தால் போதுமாம்” என்று மேனேஜர் நீட்டிய தாளில்,
“குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்…
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்…
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்…”
என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளைப் படித்த எம்.எஸ்.வி நெகிழ்ந்து போயிருக்கிறார். “விஸ்வநாதா… அதற்குள் என்னடா அகந்தை.? நீ.. என்ன அவ்வளோ பெரிய ஆளா? என்று எனக்குள் நானே வருந்தினேன்” என்று எம்.எஸ்.வி குறிப்பிட்டுள்ளார். இப்படியாக அதன்பிறகு, பட்டுக்கோட்டை எழுதிய ஒவ்வொரு பாட்டும் இனிவரும் பல்லாயிரம் ஆண்டுக்கான பாடம்.
“முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்
இகத்தில் இருக்கும் இன்பம் எத்தனை ஆனாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் ”
பட்டுக்கோட்டையின் இந்த வரிகளை வியந்து, `அடேயப்பா.. நான் மேடையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்… சட்டசபையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்… பள்ளியில் பொதுவுடமை கேட்டிருக்கிறேன்… பள்ளியறையில் பொதுவுடமை சொன்ன ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்’ என்று ஒரு மேடையில் கவிஞர் வைரமுத்து சிலாகித்தது நினைவுக்கு வருகிறது. ஆம், அவர் காதலில்கூட பொதுவுடமைச் சிந்தனை நிறைந்திருந்தது என்பதன் வெளிப்பாடு அது.
அன்றைக்கு தனது ஒவ்வொரு பாடல்களிலும் சமூக அவலத்தை எதிர்த்து எழுதிய பட்டுக்கோட்டையும் பாடல் ஆசிரியர்தான். இன்றைக்கு மலிந்துகிடக்கும் அவலங்களை ஆராதித்து எழுதுவோரும் பாடல் ஆசிரியர்கள்தான் என்றால் நகைக்கத்தான் தோன்றுகிறது. பட்டுக்கோட்டை அதற்கும் கூட ஒரு பாடல் வைத்திருக்கிறார்,
“சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க?”
என்று படித்தவர்கள்கூட தாங்கள் படித்த அறவழியில் நிற்காததை வருத்தத்தோடு சாடினார் என்பதை நினைவூட்டி நிறைவு செய்கிறேன்.
நன்றி.
#மக்கள்கவிஞர்பட்டுக்கோட்டையார்
#91வது_பிறந்தநாள்
.
மக்கள் கவிஞர் பற்றி…
பண்ணையார் பூமியின்
பாட்டாளிக் கவிஞன்
காடு கரம்பை
கழனி இவைகளின்
ஊடே ஆங்காங்கேசில
பண்ணையார் வீடு!
பண்ணையார் வீட்டுப்
பெருமைகள் பற்றிய
எண்ணிலாக் கதைகள்
எல்லாரும் பேசுவார்!
கல்லணை வாய்க்கால்
வழியே காவிரி
வெள்ளமும் இந்தப்
பூமிக்கே செல்லும்!
பண்ணையார் வளம்பெருக்கிக் கொள்ளவே துள்ளும்!
கண்ணையார் கசக்குவார்
என்றால் இங்கே
மண்ணையே உழுதுழுது
மக்கும் உழவன்தான்!
அந்த உழவன்
மத்தியில் இருந்து
வந்தான் ஒருவன்
கவிஞனாய் உலகுக்கு!
அவன்தான் கல்யாண
சுந்தரக் கவிஞன்!
அவனே என்றும்
மக்களின் கவிஞன்!
ஏடுபார்த்தே எழுதாமல்
மக்கள் படும்
பாடுபார்த்து
எழுதிய பாவலன்!
இவன்வந்து பாடல்கள்
எழுத ஏழைகள்
உவந்தனர்! ஓயாமல்
பாடி மகிழ்ந்தனர்!
பண்ணையார் பெருமைகள்
பற்றிய பேச்சுப்போய்
திண்ணைப் பேச்சில்
கூட இந்த
உன்னதக் கவிஞரின்
பாடல் வரிகளே
மின்னின! வார்த்தைக்கு
வார்த்தை பின்னின!
இந்தஏழைக் கவிஞன்
நம் காலத்தில்
ஏழைகள் மத்தியில்
இருந்தே வந்தான்!
பட்டினி கிடந்துஇவண்
படைத்த பாடல்களைப்
பட்டி தொட்டிகள்
பாடிப் பாடிப்
பசியை மறந்தன!இவன்
பாடல் எழுதிய
காலத்தில் எல்லாம்என்
காதுகள் இரண்டும்
இவன் வார்த்தைக்காகவே
தவம் இருந்தன!
இவன் சொற்களைக்
கேட்டுக் கேட்டுத்தான்
கவிதைகள் எனக்குள்
கண் விழித்தன!
கல்யாண சுந்தரக்
கவிஞனின் பாடல்கள்
எல்லாம் என்னுள்
ரத்தமாய்த் துள்ளின!
நான் நடந்துபோக
ஏற்ற பாதையை
இந்தக் கவிஞனின்
வார்த்தையே காட்டின!
தன்னம்பி க்கையை
எனக்கும் ஊட்டின!
செங்கம்ப டுத்தான்
காட்டுக் கவிஞன்இந்த
வாத்த லைக்
காட்டுக் கவிஞனுக்கு
வழிகாட்டி மட்டுமல்ல!
என்விழிகள் காணாத
ஆசானும் கூட!
அச்சம் என்பதை
அடியோடு போக்கிய
அண்ணனும் கூட!
இவன் மறைந்தபோது
மனம் பொறுக்காமல்
தேம்பித் தேம்பி
அழுதவன்தான் அன்று
மண்ணோடு மண்ணாய்
மறைந்து விட்டவன்
மண்ணிலே இருந்து
புறப்பட்டு வந்தேன்!
இவன் பெருமையைப்
பிறர்பேசக் கேட்பதையே
பெருமையாய் நினைக்கும்
மனிதனாய் வளர்ந்தேன்!
பாரதி தாசனிடம்
இவனோடு பழகிய
ஏராள மான
மனிதர் தம்மிடம்
கேட்டுக் கேட்டு
தெரிந்து கொண்டவை
ஏராள மாகும்!
காவிரிபாயும் தஞ்சைதான் பண்ணையார் பூமி!
பாட்டாளிக் கவியே
உன்னைப் பெற்றதால்
உயர்ந்து விட்டது!
கூழுக்குப் பாடினான்
கம்பன் என்றால்நீ
கூழையே பாடினாய்!
குப்பை மேட்டுக்
கோழியைப் பாடினாய்!
கொள்கைக் கவிஞனேஇந்தக்
குருவியும் உன்னையே
குருவாய்க் கொண்டது!
வாழிய உன் உன்பெயர்
மக்கள் மத்தியில்
ஓங்குக உன்புகழ்
யாங்கும் என்றுமே!







