“பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை”

1

“பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை  பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை”

*பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை*

ஸ்ரீ வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் 1872 வருடம் பிறந்தவர்கள். அவர்கள் ஆங்கிலம் பயின்று சட்ட நிபுணத்துவம் பெற்று சரளமாய் வாதிக்கும் திறமையுடைய வக்கீலாய் 1906 வருடம் வாக்கில் வந்து சேர்ந்தார்.

அன்னார் 23-ம் வயதில் இல்லறம் ஏற்றார். 1906-ம் வருடத்தில் கப்பலோட்ட அன்றைய ஆங்கிலேய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியாரோடு போட்டி போட புகழ்பெற்ற பண்டை நாளைக் கப்பல் திறனை புதிதாகப் புகுத்த வேட்கை கொண்டார். விரைவில் அதற்கான காரியங்களும் நிகழ்ந்தன. அதில் ஏற்ப்பட்ட பொருளாதாரச் சிக்கல் சர்க்காரின் இடையூறு சிகிக்கொணாதது.

அன்றைய காலத்தில் தான் அரசியல் அரங்கில் வெறும் விண்ணப்பத்தோடு விஞ்ஞாபத்தோடு நின்ற காங்கிரஸ் முதன் முதலாக வீரம் செறிந்த விவேகம் நிறைந்த தியாகத் துடிப்புக் கொண்ட சபையாக மாற எத்தனித்தது. அந்த எத்தனிப்பும் முன்னேற்ற முகிழ்ப்பும்தான் 1907-ம் வருடம் நடந்த பெயர்போன சூரத் காங்கிரஸ். அதில் தான் மாராட்டிய வீரனும் சிவாஜியின் பரம்பரையும் கீதாரகஸ்யமென்னும் உயரிய அறிவு செறிந்த ஆன்மீகக் கருத்துக் கொண்ட அதி அற்புத நூலை ஆங்கிலத்தில் எழுதி உலகத்திற்கு தந்த மகாவீரன் லோகமான்ய பாலகங்காதரத் திலகர் தோன்றிய (உலகத்திற்கு அல்ல அரசியலின் தீவிர அரங்கிற்கு) புனித நாள்!

அதில்தான் அன்றைய மிதவாதிகளின் முக்கியஸ்தரான கோபால கிருஷ்ண கோகலே என்பாரும் லோகமான்ய திலகரும் தீவிரப் போட்டியிட்டு தங்கள் தங்கள் கொள்கையை தேசத்தில் ஸ்தாப்பிக்க முற்பாடு வேளையில் பேச்சின் விளைவு வீரத்தின் விளைவாய் வீரத்தின் முடிவு குழப்பமாய் குழப்பத்தின் முடிவு ஆங்கிலேயனுக்கு திலகரைக் காட்டிக் கொடுத்த முடிவாய் அம்முடிவு திலகரை சிறைச் சாலை வரவேற்றதாய் மூண்டது என்பது அனைவருமறிந்த விஷயம்.

அக்காலத்தில் திலகரோடு தோளோடு தோள் நின்ற காரியம் சாதித்த சாதிப்பதற்கெனவே தன் வாழ்நாளைச் சேமித்த சிதம்பரம் பிள்ளையவர்கள் தென்னாட்டிற்கும் தேசத்திற்கும் ஆற்றிய தொண்டு பலவகைப்படும்.

அவற்றிள் குறிப்பாக 1906-ம் ஆண்டில் திருநெல்வேலியில் “தேசாபிமானம் சங்கம்” ஒன்று சிதம்பரம் பிள்ளையவர்களால் நிறுவப்பட்டது.

இச்சங்கம் அடிக்கடி பொதுக்கூட்டங்கள் கூட்டி சுதேசிப் பற்று அந்நிய சாமான் விலக்கு, தேசியக்கல்வி என்பவைகளைப் பற்றி பிரசங்கிக்க ஏதுவாக இருந்தது. அச்சமயத்தில் சுப்பிரமணிய சிவா அவர்கள் திருநெல்வேலி வந்தார்கள். இவர் சிறந்த தமிழறிஞர் படித்த தேச பக்தர்.

அக்காலத்தில் சிதம்பரம் பிள்ளையவர்கள் சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலாளாராக இருந்ததால் வேலை முடிந்ததும் மாலை நேரங்களில் தூத்துக்குடி கடற்கரையில் நடக்கும் பொதுக் கூட்டங்களுக்கு வந்து சிவாவின் பேச்சைக்கேட்டு அகமகிழ்ச்சி எய்துவார்.

அக்காலத்தில் 1908-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதியை வடஇந்தியாவின் மற்றொரு தேசத் தலைவரான விபின் சந்திர பாலர் விடுதலை தினமாகக் கொண்டாட திருநெல்வேலி ஜில்லாவெங்கும் “தேசாபிமான சங்கத்தார்” தீவிர முயற்சி எடுத்துக் கொண்டனர். அந்தக் தினத்தைக் கொண்டாக்கூடாது என்ற நிலையில் மார்ச் 9-ம் தேதியன்று தூத்துகுடியில் ஊர்வலமாக பொதுக்கூட்டமோ நடத்தக்கூடாது என்று மாஜிஸ்திரேட் தடையுத்தரவு போட்டார். மாஜிஸ்திரேட்டு சிதம்பரம் பிள்ளையை நேரில் வரவழைத்து ஊர்வலத்திலோ பொதுக்கூட்டத்திலோ எவ்வித சம்பந்தமும் ஊக்கமும் இருக்ககூடாது என்று எச்சரித்தார். பிள்ளை அவர்கள் “எழுத்துமூலமாக உத்தரவு கொடுங்கள்” என்று கேட்டார். அவர் அம்மாதிரி ஒன்றும் கொடுக்கத் துணியவில்லை.

தானமைத்த சுதேசிக் கம்பெனியின் நிர்வாகிகளைக் கலந்தார். அவர்கள் போர்டுக் கூட்டத்தைக் கூட்டி சிதம்பரம் பிள்ளையவர்கள் எவ்வித தேசிய நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். சிதம்பரம் பிள்ளையோ லாபத்திற்கென பொருள் குவிப்பதற்கென பொல்லாத நோக்குக் கொண்ட கம்பெனியின் பங்குதாரர்களில் ஒருவரா? அதற்கெனவா கம்பெனி ஸ்தாபிக்கப்பட்டது அல்ல!

வெள்ளையன் கொள்ளையடிக்கும் பணத்தை நிறுத்த வேண்டுமென்ற ஒரே நோக்குடன்தான் அது ஸ்தாபிக்கப்பட்டது. ஆகையால் பிள்ளையவர்கள் இதற்குச் சற்றும் செவிசாய்க்காது அந்த மார்ச் மாதம் கூட்டத்தைக் கூட்டி வெகு அமைதியான முறையில் மிகவும் சிறப்பாகக் கூட்டத்தை நடத்தினார் குமுறிப் பேசினார். மக்களிடையே அரசியல் கொதிப்பை ஆக்குவித்தார் ஊக்குவித்தார்.

அதன் பலன் திருநெல்வேலி டவுனில் மக்களின் ஆத்திரம் அதிகப்பட்டு அந்நிய ஆடை தரித்தவரைக் கண்டால் அந்நிய கம்பெனிக்கு ஆதரவளிப்பவர்களைக் கண்டால் அதிகாரிகளைக் கண்டால் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும் தேசத் துரோகிகளைக் கண்டால் அம்பட்டார் சவரம் செய்யமாட்டார். வண்ணார் துணி வெளுக்கமாட்டார். பலகாரக்கடைக்காரர் பலகாரம் தரமாட்டார். வண்டிக்காரர் வண்டியோட்டமாட்டார். இம்மாதிரி சம்பவங்கள் ஏகபோகமாக நடந்தன பார்த்தனர் அரசாங்கத்தார்.

“சிதம்பரம் பிள்ளையைக் கைது செய்தாலொழிய காரியம் மிஞ்சிவிடும்” என்று கண்டனர். கண்டதும் தூத்துக்குடியில் கைது செய்யப் பயந்து திருநெல்வேலி தன்னை வந்து சந்திக்கும்படி விஞ்ச் என்ற கலெக்டரவர்கள் சிதம்பரம் பிள்ளைக்கும் சிவாவுக்கும் உத்தரவு அனுப்பினார். இவர்கள் சென்றார்கள். இவர்கள் சென்றவுடன் “திருநெல்வேலி ஜில்லாவை விட்டு உடனே வெளியேறச் சம்மதிக்க வேண்டும்மென்றும் அரசியல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை என்று ஜாமீன் தர வேண்டுமென்றும் கேட்டார்.

சிதம்பரம் பிள்ளையவர்கள் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதத்திற்குப் பின் கலெக்டர் ஒரே பிடிவாதமாக இருக்க கலெக்டரிடம் “தான் எந்தவித நிபந்தனையிலும் கையெழுத்துப் போட முடியாதெனவும் தம்மை வேண்டுமானால் கைது செய்து கொள்ளாலாம் என்றார்.

அதன் பயனாய் சிதம்பரம் பிள்ளையவர்களும் சிவாவும் கைது செய்யப்பட்டார்கள் கைது செய்யப்பட்டா தகவல் மின்னல் வேகத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி முதலிய நகரங்களில் பரவியது. அம்மாத்திரத்தில் ஜனங்கள் வெகுண்டார்கள். வீராவேசமடைந்தார்கள். வீதயெங்கும் வெளியெங்கும் பெருங்கூட்டமும் குழப்பமும் அதிகரித்தது.

சர்க்கார் அதிகாரிகள் சமாளிக்க முடியாதெனப் பயந்து கலெக்டருக்கும் சூப்பிரிண்டெண்டுக்கும் தகவல் அனுப்ப மேற்படி இருவரும் கைத் துப்பாக்கியுடனும் விசேஷப் படையுடனும் விரைந்து வந்து தெருவில் நின்ற ஜனங்களைச் சின்னாபின்னமாகச் சுட்டனர். அக்குண்டுகளுக்கூ இரையாகி கோயில் பணி செய்து கொண்டிருந்த 17 வயதுப் பையனும் கடையைப் பூட்டிவிட்டு வெளியே போன மற்றொரு 18 வயது வாலிபனும் உயிர் துறந்தார்கள்.

அந்த பிரேதங்கள் காயமடைந்தவர்கள் எல்லாம் அப்புறப் படுத்தப்படாமல் மாலைவரை வீதியிலேயே அனாதைகள் போல் கிடத்தப்பட்டார்கள். அதை அப்புறப்படுத்தவோ காயமடைந்தவர்களுக்கு வேண்டிய சிகிச்சை புரியவோ வேண்டிய மனித புத்தி அன்றைய அதிகார வர்க்கமாகிய வெள்ளைய இந்திய மனித மிருகங்களுக்கு இருக்கவில்லை.

இன்றை அம்மாதிரிக் குணங்கள் நிகழும் காலத்தில் அன்றைய நிலையை ஒப்பிடுவானேன்?

அதோடு மட்டுமல்லாமல் சர்க்கார் தண்டப் போலீஸ் படையை வரவழைத்து திருநெல்வேலி தூத்துக்குடி தச்சநல்லூர் முதலிய இடங்களுக்கு அனுப்பி தண்டவரி வசூலிக்க பிரகடனமும் செய்தார்கள்.

மேலும் 89 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு அதில் ஒருவர் தவிர மற்றையோரெல்லாம் பற்பல தண்டனைக்குள்ளானார்கள். மற்றும் இத்தோடு வஞ்சம் தீர்த்தது போதாதென்று மார்ச் 12-ம் தேதி அரஸ்டை அதிகப்படுத்தவும் குற்றஞ்சாட்டவும் குறுகிய நோக்கோடு 1908-ம் வருடம் பிப்ரவரி 23 26 தேதிகளிலும் மேற்படி ஆண்டு மார்ச் 1,3 தேதிகளிலும் சர்காருக்கு விரோதமாக நிந்தனையாகப் பேசியதாக 124ஏ பிரிவுப்படியும் சுப்பிரமணிய சிவாவும் இடமும் உணவும் அளித்ததற்காக 153ஏ பிரிவின்படி சிதம்பரம் பிள்ளை அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தது.

சிதம்பரம் பிள்ளைக்காக தஞ்சை வக்கீல் ராமசாமி ஐயரவர்கள் ஆஜரானார்கள். விசாரணைக் காலத்தின் இடையில் கோர்ட்டார் தம் வக்கீலிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று பிள்ளையவர்கள் வழக்காட மறுத்துவிட்டார். மாஜிஸ்திரேட் விசாரணைக்குப் பின்பு வழக்கை அடிஷனல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றினர். செஷன்ஸ் நீதிபதி பின்ஹே அவர்கள் முன்பு சில மாதங்கள் நடைபெற்றது. பிள்ளையவர்களுக்காக சடகோபாச்சாரியாரும் சர்க்கார் தரப்பில் கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியாருட்பட பல சான்றோகள் சாட்சியம் புரிந்தனர். சர்க்கார் தரப்பிற்கு போலீஸ் உத்தியோகஸ்தர்களும் வெள்ளை ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களும் பங்குதார்களும் சாட்யம் கூறினர். சர்க்காரின் விசாரணை நாடகம் தெரிந்தது தானே.

தேசியத்தை நசுக்க அநீதியைப் பெருக்கியேனும் ஆட்சியை நீடிக்க அயாரது பாடுபடும் வெள்ளை வர்க்கம் அதன் பிரதிநிதியான பின்ஹே “அரசாங்கத் துவேஷக் குற்றத்துக்காக பத்து வருடத் தீவாந்திர தண்டனையும் சிவாவிற்கு உடந்தையாயிருந்த குற்றத்திற்காக மற்றொரு பத்து வருடத் தீவாந்திரத் தண்டனையும் இவை இரண்டையும் ஒன்றின்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்” என்று கட்டளை பிறப்புவித்து “பிள்ளை ஒரு பெரிய ராஜத் துரோகி அவருடைய எழும்புக்கூடு கூட ராஜ விசுவாசத்திற்கு விரோதமான தென்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்.

அக்கொடிய தண்டனையை அப்பீல் கோர்ட்டார் முதல் குற்றத்திற்கேற்பட்ட பத்து வருடத் தண்டனையை ஆறு வருடமாகவும் பின் தண்டனையை நான்கு வருடமாகவும் இரண்டையும் ஏக காலத்தில் அனுபவித்தால் போதுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

சிறைச்சாலையோ அன்றைக்கிருந்த கோரம் அளவிடற்படாதது. சிதம்பரம் பிள்ளை செக்கிழுத்தார் என்றால் தன்மை என்னவென்பதே நான் சொல்ல வேண்டுவதில்லை.

இன்றைக்குள்ள சிறைவாசமோ வங்கத்தின் வாலிபன் யதீந்திரநாத் தாஸ் 61 நாள் உண்ணாவிரதத்தின் பயனாய் அணுஅணுவாய்த் தன் சரீரரத்தை சித்ரவதை செய்து தேசத்திற்காக சிறை செல்லும் தியாகிகளுக்குத் தனிச்சலுகை வேண்டும் என்ற பிரார்த்தனை. அவ்வாலிபனின் பிரேதத்திற்குப் பின்னால் ஏ-பி-ஸி வகுப்புகளாக மாறியிருக்கிறது. அவ்வாலிபனின் பிரேதத்தை சிறைச்சாலையின் வாயிலில் சென்று கையேந்தி வாங்கியது இன்றைய வங்கச் சிங்கம் நேதாஜி என்பதை ஞாபகப்படுத்துகிறேன். அந்த தியாகம் காந்தியடிகளால் அன்றைய நிலையில் சர்க்கார் அதிகாரிகளை உண்ணா விரதத்தின் மூலம் நிர்ப்பந்திப்பது அகிம்சைக்குப் புறபானது என்று அறிக்கையால் வெளியிடப்பட்ட அலங்கோலம் மற்றொன்று.

அம்மாதிரி கடுந்தண்டனையை சிதம்பரம் பிள்ளை அவர்கள் அனுபவித்தார்கள். அந்தக் காலத்தை மாடு போல அல்ல மாடாகவே செக்கிழுத்துக் கழித்தார். கழித்தபின் விடுதலையடைந்தார் வெளிவந்தார். வந்த காலத்தில் அவரை வாவென்று வரவழைக்கவோ ஊர்வலம் நடத்தவோ படத் திறப்பு விழாச் செய்யவோ பட்டங்கள் வழங்கவோ எவரும் முன்வந்தாரா! அவரும் எதிர்பார்த்தாரா? இரண்டுமில்லை.

அன்னார் 1919-ம் வருடம் காங்கிரசில் காந்தியடிகளால் கொண்டு வரப்பட்ட அகிம்சை சத்தியம் என்ற ஒத்துழையாமைத் தீர்மானத்தை கல்கத்தா விசேஷ காங்கிசில் எதிர்ப்பதற்குகாக இங்கிருந்தே புறப்பட்டுச் சென்றார். செல்லுங் காலத்தில் அக்காலத்தில் இந்நாட்டிலிருந்த மற்றொரு பெரியார் சேலம் விஜயராகவாச்சாரியாரவார். இவர் பிரயாண காலத்தில் ரயிலில் பிரயாணம் பண்ணுபவரா அல்லது பிச்சைக்காரரா? என்று சந்தேகிக்கும் நிலையில் ஒவ்வொரு வண்டியிலிருந்தும் இறங்கி இறங்கி ஏறும் நோக்கத்தோடு ஒவ்வொரு பிரதிநிதிகளையும் சந்தித்து தனக்காக வோட்டுச் சேகரிப்பதையே தொழிலாகக் கொண்டார். அப்பொழுது கிலாபத் இயக்கம் கூடி நின்றதால் அதற்கு ஒத்துழைக்க காந்தியடிகளின் சேவைக்கு பல முஸ்லீம் பிரதிநிதிகளின் பிரீதி ஏற்பட்டதால் அந்தத் தீர்மானம் பிள்ளையவர்கள் எதிர்ப்பிலிருந்தும் நிறைவேறியது அக்காலத்தில் பிள்ளையவர்கள் சொன்னதாவது.

“சர்க்கார் செய்தது அத்தனையும் ஏற்று சலாம் செய்ய வேண்டுமென்கிறது மிதவாதக் கூட்டம். சர்க்கார் செய்வது அத்தனையிலும் ஒத்துழையாமை செய்ய வேண்டும் என்று சொல்கின்றது மற்றொரு அரசியல் நுணுக்கம் அறியாத கூட்டம். தீவிரவாதம் என்னும் மறைவில் நான் ஒத்துழைக்க வேண்டாத இடத்தில் எல்லாவகை முட்டுக்கட்டையும் இச்சர்க்காருக்குத் தரவேண்டுமென்கின்றேன். இப்பொழுது திலகர் இருந்திருந்தால் இம்மாதிரித் தீர்மானத்தை பிரச்சனைக்காவது அனுமதித்திருப்பாரா? இம்மாதிரி பேடித் தீர்மானத்தை பிரவேசிக்கவிடும் காலம் காங்கிரசுக்கு வந்ததே” என்று சொன்னார்.

அவர் வடக்கத்திய அரசியல் தலைவர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவர் ஒரு சமயம் அன்றைய தேசியவாதியும் இன்றைய மகரிஷியுமான அரவிந்தகோஷ் அவர்களால் “எனது பிள்ளையவர்கள் எங்கே?” என்று காங்கிரஸ் பந்தலில் கேட்ட காலத்தில் பக்கத்திலிருந்த வட இந்திய முக்கியஸ்தர்கள் “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார்கள் அப்பொழுது அவர் “தென்னிந்தியாவின் சிறந்த தேசியவாதியாகிய வ.உ.சிதம்பரம் பிள்ளையைத் தெரியாதா? என்று பதிலளித்தார். அந்தத் தமிழன் அன்று கண்ட கப்பலோட்டும் தொழில் இன்று அவர் பந்து இனத்தைச் சேர்ந்த மற்றொருவரால் நடத்தப்பட்டு சர்க்காரின் கவர்னர் ஜெனரலால் ஓட்டுவிக்கப்பட்டிருகிறது. இது நினைவுகாலம். வருங்காலமோ சர்க்காராலேயே அக்கம்பெனி நடத்தப்பட்டு கடற்கரையின் தீபஸ்தம்பத்தில் சிதம்பரம் பிள்ளையவர்களின் சிலை மின்சாரத் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு செய்கைக் காலமாக மாறும்.

அந்நாள் சமீபத்தில் நன்னாளாக வரும்!

வாழ்க சிதம்பரம் பிள்ளை நாமம்.

(கண்ணகி 20.2.1949)

 

1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *