குண்டலினி சக்கரங்கள் குறித்து இந்து மதம் கூறுவது என்ன?

ராஜ யோகம் எனப்படும் 6+1 என ஏழு சக்கரங்கள் மீது படிப்படியாக குண்டலினி சக்தியை ஏற்றி சகஸ்ரரத்தில் நிறுத்தும் வித்தையை 1) தியானத்தின் மூலமாக சாதிக்க வேதாத்திரி மகரிஷி வழியும் பல சித்தர்களும் காட்டினார்கள், 2) மூச்சுப்பயிற்சி மூலம் சாதிக்க ரவிஷங்கர் க்ரியா யோக லாஹிரி மகாசையர் ஆகியோர் வழி காட்டினர் … ஆனால் கோவில் வழிபாட்டில் என்ன இருக்கிறது என்று கேட்போருக்கான பதிவு…

முதலாம் சக்கரமான மூலாதாரத்திற்கு அதிபதி விநாயகர்… அதுமட்டுமல்ல… விநாயகர் மூலமாக ஏழாம் சக்கரமான சகஸ்ரரத்தை திறக்கும் வித்தையையும் முக்திக்கும் முறையான விநாயகர் வழிபாடே தரும்…

இதை 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஔவையாரின் விநாயகர் அகவலே தெரிவிக்கிறது…

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

///

ஆக குண்டலினி யோகமும் கோவில் வழிபாடும் வேறு வேறு அல்ல… உடலில் உள்ள ஏழு சக்கரங்களின் வடிவே கோவில் வாயில் கோபுரம் முதலாக கருவறை வரை என சைவ ஆகமங்களே தெரிவிக்கிறது…

தமிழக சைவத்தின்படி,

1) மூலாதார சக்கரத்தில் லயிப்பவர் விநாயகர்…

2) சுவாதிஷ்டானத்தில் லயிப்பவர் பிரம்மா…

3) மணிப்பூரகத்தில் லயிப்பவர் விஷ்ணு / பெருமாள்…

4) அனாகதத்தில் லயிப்பவர் ருத்ரன்…

5) விசுத்தியில் லயிப்பவர் மகேஷ்வரன்…

6) ஆக்ஞையில் லயிப்பவர் சதாசிவன்…

7) சகஸ்ராரத்தில் லயிப்பவர் பராபரன் என்ற பரமசிவன்…

இதை சித்தர்களின் பாடலிலேயே அடுத்த பதிவில் காணலாம்…

அதன் சுருக்கம்…

பரமசிவன் – பிரம்மசிவன் – சகஸ்ரரம் – ஸத்யலோகம்

சதாசிவன் – ஆக்கினை – தபோலோகம்

மகேஸ்வரன் – விசுத்தி – ஜனோலோகம்

ருத்திரன் – அனாகதம் – மஹாலோகம்

விஷ்ணு இந்திரன் – மணிப்பூரகம் – சுவர்லோகம்

பிரம்மன் – சுவாதிஷ்டானம் – புவர்லோகம்

பிள்ளையார் – மூலாதாரம் – பூலோகம்…

///

மணிப்பூரகம் ராஜஸ குணம் மிகுந்தது… ராஜன் பெருமாள் என்பது சைவ நிலைப்பாடு… ராஜஸ குணத்தை கட்டுப்படுத்தி அதனை ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்த வைக்கும் பெருமாள் வழிபாடு, சைவ நெறியில்… வைணவ நெறியில் நின்றால் பெருமாள் வழிபாடு ஏழாவது சக்கரம் வரை போகும் என்பது வேறு விஷயம்… மூலாதாரம் தாமஸ குணம் மிகுந்தது… இத்தகைய குணத்தோருக்கு மூலாதார சக்கரம் திறந்திருக்காது… ஆதலால் அதனை அடக்கி கட்டுக்குள் வைத்து முறைப்படுத்த விநாயகர் வழிபாடு அந்தந்த மக்களுக்கு சொல்லப்பட்டது… அனாகதம் முதல் சகஸ்ராரம் வரை ஸத்வ குணம் தலையோங்கும்… இத்தகையோருக்கே ருத்ர மகேஷ்வர சதாசிவ பரமசிவ வழிபாடு உரித்து… ஆக எடுத்ததும் சிவன் கோயிலுக்கு போவது என்பது ஓட்டைப்பானையில் நீரை ஊற்றுவதே ஆகும்… அதனால் தான் அவரவர் நிலைக்கு ஏற்ப சிவன் கோயிலுக்கு போகும் முன்னர் பிள்ளையார் கோயிலுக்கு போக வேண்டும், பெருமாள் கோயிலுக்கு போக வேண்டும் என வலியுறுத்தினர்… போனால் மட்டும் போதாது , அங்கே செய்ய வேண்டிய கிரியைகளை முறையாக செய்ய வேண்டியது கட்டாயம்… அவையெல்லாம் என்னவென்றே இன்று ஏகதேசம் பேருக்கு தெரியாது… இந்த பெருமாள் வழிபாடு, விநாயகர் வழிபாடு எல்லாம் தமிழக சைவ மதத்தை பொருத்தவரை அதனின் முக்கியமான அங்கங்கள்… தாமஸ குணத்தில் இருந்துகொண்டு நான் பரமசிவனை மட்டுமே வழிபடும் சைவன் ஆவேன் என்றால் அது கால்கள் இல்லாமல் ஓட்டப்பந்தயம் ஓடுவேன் என்று சொல்வதற்கு சமம்… சைவ மதத்திற்கு வர வேண்டும் என்று சிவாச்சாரியார்களிடம் மக்கள் முதல் தீக்ஷை பெற்றுக்கொண்டாலும் அதன்பிறகு செய்யப்படும் கிரியைகளில் ஒரு பகுதியாக நான் விளக்கிய இவைகளும் ஒரு அங்கமாக செய்யச் சொல்வார்கள்…

இப்படியாக ஏழு சக்கரங்களை நீங்கள் புள்ளியாக பார்த்தீர்கள் என்றால் அதனை encrypt செய்த சைவ வைணவ சாக்த கணாபத்ய கௌமார மதங்கள் என்பன அந்த புள்ளியியல் போடப்பட்ட அழகிய கோலங்கள்… இந்த கோலம் வேண்டாம் புள்ளிகள் மட்டுமே போதும் என்று உங்கள் மனம் விரும்புகிறது என்றால் தாராளமாக நீங்கள் வேதாத்திரி மகரிஷி வழியிலோ அல்லது வள்ளலார் வழியிலோ பயனிக்கலாம்…

கட்டுரையாளர் :

கொங்கு வேளாளர்

ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர் 

மேலும் தொடர்புக்கு :

ஒட்டப்பிடாரம்

சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758  

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *