சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்!
தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை.
இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும். சிவன் கோயில்களில் ஆதிசைவர்களும், பெருமாள் கோயில்களில் பட்டாச்சாரியார்களும் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் என்பது ஆகம விதி. இவர்களும் பிராமணர்கள் தான்.
மூன்றாவதாக, ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம் உள்ளது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தனி மனிதன், தான் கடவுள் நிலை அடைவதற்கான தியானங்களில் ஈடுபட்டால் அவன், கடவுளாகி விடுவான். அதாவது ஆன்மாவே கடவுள். கடவுள் என்ற தனிப் பொருள் இல்லை என்பது அர்த்தம். அதனால் இந்தத் தத்துவத்திற்கு என்று தனிக் கோயில்கள் உருவாகவில்லை. ஏனெனில் அதற்கான தேவை இந்தத் தத்துவத்தில் இல்லை. ஆதிசங்கரரின் இந்த தத்துவத்திற்கு கேவல அத்வைதம் என்று பெயர். கேவலம் என்றால் தனித்து நிற்பது என்று அர்த்தம்.
சைவ சித்தாந்தத்தையும், விசிஷ்டாத்வைதத்தையும் பரப்ப மடங்கள் உருவாக்கப்பட்டன. அவை இன்றும் உள்ளன. அவற்றின் நிர்வாகங்களில் பல கோயில்களும் உள்ளன.
ஆதிசங்கரரின் தத்துவப்படி, ஒரு துறவி எங்கும் தங்கக் கூடாது; ஒரு கிராமத்தில் அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே தங்கலாம். அலைந்து திரிந்தபடி இருந்தால்தான் அவனுக்குப் பற்று உருவாகாது என்பது கருத்து. அதனால் ஆரம்ப காலகட்டங்களில் ஆதிசங்கரரின் மரபில் மடங்கள் உருவாவதற்கான சூழல் இல்லை. பிற்காலத்தில் அவரது பெயரில் பல மடங்கள் தோன்றின. ஆனால், சைவ, வைணவ மடங்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கு அவற்றுக்கு ஏற்படவில்லை.
சைவ ஆகமங்களின்படி, கருவறை முதல் இறைவனுக்கு உணவு தயாரிக்கும் மடைப்பள்ளி வரை ஆதிசைவர்கள், சிவப்பிராமணர்கள், சிவத்விஜர்கள் எனப்படும் சிவாச்சாரியார்கள் தான் பணியாற்ற வேண்டும். பிற பிராமணர்களுக்கு கோயில்களில் எந்தப் பணியும் கொடுக்கப்படக் கூடாது என்பது ஆகமங்களி்ல் கூறப்பட்டுள்ள விதி. அவர்கள் மற்றவர்களைப் போல வழிபடுவதற்கும், பொது இடத்தில் இருந்து வேத பாராயணம் செய்வதற்கு மட்டும் கோயிலுக்கு செல்லலாம்.
கிபி 15ம் நுாற்றாண்டு வரை இந்த நிலைமையில் 99 சதவீதம் மாற்றம் ஏற்படவில்லை. சிவாச்சாரியார்களே கோயில்களில் முழு அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர்.
விஜயநகர ஆட்சி தமிழகத்தில் நுழைந்த போது, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து பெருமளவு பிராமணர்கள் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டனர். குறிப்பாக, காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற நதிக் கரைகளில் அவர்களுக்கு பெரிய அளவில் அக்ரஹாரங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இதன் விளைவாக பிறமொழி பேசும் பிராமணர்கள், தமிழ்ப் பிராமணர்களை விட பெருமளவு நில உடைமையாளர்களாக மாறினர்.
படிப்படியாக இந்தப் பிராமணர்கள் தங்கள் செல்வாக்கின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடித்தனர். தஞ்சையை ஆண்ட செவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர், (கிபி 1515 – 1635) மதுரையில் திருமலை நாயக்கரிடம் தளபதியாக விளங்கிய ராமையன் என்ற ராமப்பையன் (திருமலை நாயக்கர் காலம் 1623 -1656) ஆகியோரை உதாரணமாக சொல்லலாம்.
நாயக்கர் மற்றும் மராட்டியர்கள் காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு பெற்ற பிறமொழி பிராமணர்கள், படிப்படியாக கோயில் நிர்வாகங்களை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர், சிவாச்சாரியார்கள் வெறும் அர்ச்சகர்களாக மாற்றப்பட்டு, அவர்களது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அவர்களின் பணியிடங்கள் பறிக்கப்பட்டு பிற பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன் விளைவாக, 20ம் நுாற்றாண்டில், சிவன் கோயில்களில், பிராமணப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சிவாச்சாரியார்களின் எண்ணிக்கை சுருங்கியது.
கோயில்களில் பிராமணர்களின் செல்வாக்கு அதிகரிப்பானது, தமிழகத்தில் காஞ்சி சங்கர மடத்தை ஒட்டுமொத்த இந்து மதத்தின் பிரதிநிதியாக ஆக்குவதற்குப் பெரிய அளவில் உதவியது. காஞ்சி சங்கராச்சாரியார்கள், தங்கள் துறவின் எல்லையோடு நிற்காமல், அரசியலிலும் ஈடுபட்டு தங்களை ஒரு அதிகார மையமாக மாற்றிக் கொள்வதில் மிகுந்த கவனத்தோடும் ஈடுபாட்டோடும் செயல்பட்டு வந்தனர், வருகின்றனர் என்பதை வரலாறு காட்டுகிறது.
கிபி 16ம் நுாற்றாண்டில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், பிராமணர்களின் நிர்வாகத்தில் இருந்த பாசுபத மடம் ஒன்றின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அங்கு ஆகம வழிபாடு மட்டுமே இருந்த நிலை மாறி, ஆகமும் வைதீகமும் கலந்த வழிபாடு உருவானது. 18 ம் நுாற்றாண்டில், மாதவச் சிவஞான சுவாமிகளின் மாணவரான கவிராட்சசர் கச்சியப்ப முனிவர், திருவானைக்கா தலத்திற்கு ஒரு தலபுராணம் எழுதினார். அதில் ஆதிசைவர்கள் பற்றி குறிப்பிட்டாலும், அக்கோயிலில் ஆகமம் மற்றும் வைதீகம் என்ற இரண்டும் கலந்த பூஜை நடைமுறையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
அக்கோயிலில் உள்ள அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்க பிரதிஷ்டை யார் செய்வது என்பது குறித்து, கிபி 1842ம் ஆண்டு கும்பகோணத்தில் அப்போது இருந்த சங்கர மடத்திற்கும், சிருங்கேரி சங்கர மடத்திற்கும் வழக்கு நடந்தது. அந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து இறுதியில் கும்பகோணத்து சங்கர மடத்திற்கு சார்பாக தீர்ப்பு வெளியானது. 1908 ம் ஆண்டு அப்போதுதான் 68 வது மடாதிபதியாக 13 வயதில் பொறுப்பேற்ற சந்திரசேகரேந்திர சரஸ்வதி, அந்த ஆண்டு நடந்த திருவானைக்கா கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று தாடங்கப் பிரதிஷ்டை செய்தார். இப்போது வரை அந்த உரிமை காஞ்சி சங்கர மடத்திடம் தான் உள்ளது.
- அதேபோல் ராமேஸ்வரம் கோயிலில் கருவறைக்குள் புகும் உரிமை குறித்தும் இருதரப்பிற்கும் பல்லாண்டுகளாக பிரச்னைகள் நடந்துள்ளன. 2021, பிப்ரவரி 21ம் தேதி அர்ச்சகர்களின் பலத்த எதிர்ப்பை மீறி, விஜயேந்திரர் கருவறைக்குள் நுழைந்த சம்பவம் ஊடகங்களில் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது.
- 1942 ம் ஆண்டு, காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகம், ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், காஞ்சி சங்கர மடத்தின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது.
இன்றைய நிலையில் திருவானைக்கா, ராமேஸ்வரம், காஞ்சி காமாட்சி ஆகிய மூன்று கோயில்களும் முழுவதும் வைதீக வழிபாட்டிற்கு மாற்றப்பட்டு விட்டன.
- சுதந்திரப் போராட்ட காலத்தில், கேரளா சென்றிருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தனது ஆதரவாளர்கள் மூலம் காந்தியை சந்தித்தார். அந்த செய்தி மட்டும் வெளிவந்தது. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது வெளிவரவில்லை.
- ஆலய நுழைவுப் போராட்டத்தின் போது, மரபுச் சைவர்கள், வைணவர்கள் அணி திரண்டு போராடிக் கொண்டிருந்த போது, தன்னை மட்டுமே இந்துக்களின் பிரதிநிதியாக சந்திரசேகரேந்திர சரஸ்வதி முன்னிறுத்திக் கொண்டார். அதன் விளைவாக அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

- 1950 ம் ஆண்டுக்குப் பின் இந்து சமய அறநிலையத் துறையை தன் சொல்படி ஆட்டுவிக்கும் சக்தி கொண்டவராக மாறினார் சந்திரசேகரேந்திரர். திடீரென சைவ, வைணவ மதங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த அவர், கோயில்களில் திருப்பாவை – திருவெம்பாவை மாநாடுகள், போட்டிகள் நடத்த வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தினார். இந்து சமய அறநிலையத் துறை அவரது ஆசையை தனது முக்கிய பணியாக சிரமேற்கொண்டு நிறைவேற்றியது. அனைத்து கோயில்களுக்கும் உத்தரவுகள் பறந்தன.
ஆனால், சைவர்களும், வைணவர்களும் சந்திரசேகரேந்திரரின் இந்த நாடகத்தைக் கடுமையாக எதிர்த்தனர். சந்திரசேகரேந்திரர் தனது அதிகார எல்லையை மீறி தனக்கு சொந்தமில்லாத சைவ, வைணவ வழிபாடுகளில் தலையிடுவதாக அறிக்கைகள் வெளியிட்டனர். துண்டுப் பிரசுரங்கள் மூலம் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அதன் உச்சகட்டமாக, சந்திரசேகரேந்திரர் தனது தினசரி வழிபாட்டில் திருப்பாவை பாடுவாரா என காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல வைணவ ஆசாரியரான பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், அவரிடமே நேரடியாக கேட்டார்.
எனினும் அரசியல் செல்வாக்கால் தான் நினைத்த காரியத்தை சாதிக்க வல்லவராயிருந்தார் சந்திரசேகரேந்திரர்.
- சிவன் கோயில்களில் ஆதிசங்கரர் சிலைகளை நிறுவுவது ஆகமப்படி தவறு என்பதை அறிந்திருந்தாலும், வாரியார் சொன்னார் என்று சாக்குபோக்கு சொல்லி வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலில், 1968 ம் ஆண்டு கும்பாபிஷேகத்தில் ஆதிசங்கரர் சிலை நிறுவ ஆணையிட்டார் சந்திரசேகரேந்திரர்.
- சிவன் கோயில்களின் கும்பாஷேகத்தில், விமானத்தின் மீது ஏறி கும்பத்தில் புனித நீரை அபிஷேகம் செய்யும் உரிமை ஆதிசைவர்கள் எனப்படும் சிவாச்சாரியார்களுக்கு மட்டுமே உண்டு. அதிலும் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது காஞ்சி சங்கர மடம்.
1963 ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது மீனாட்சியம்மன் கோயில் விமானத்தின் மீது சந்திரசேகரேந்திரரும் அவரது சீடரான ஜெயேந்திரரும் ஏறி கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
அப்போது தொடங்கி, மிகப் பெரிய கோயில்களின் விமானங்களின் மீது ஏறி புனிதநீர் ஊற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டனர் சங்கராச்சாரியார்கள்.
சமீபத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், 2018 ம் ஆண்டு நடந்த திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஆகியவற்றில் விஜேயேந்திரர் விமானத்தின் மீது ஏறி புனிதநீர் ஊற்றினார். நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சமீபத்தில் நடந்த கும்பாபிேஷகத்தில் சிருங்கேரி சங்கராசாரியாரும் விமானத்தின் மீது ஏறி புனிதநீர் ஊற்றினார்.
கடந்த 2004ம் ஆண்டு நெல்லையப்பர் கோயில் திருப்பணி தொடங்கப்பட்ட போது, அப்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் தனது செல்வாக்கின் மூலம் அங்கு நுழைந்தார். ஆனால் அவர் திருப்பணியில் பங்கேற்றால், ஆகம விதிமீறல்களில் ஈடுபடுவார், விமானங்களில் ஏறி புனிதநீர் ஊற்றுவார், அவருக்கு ஆகமக் கோயில்களில் வழிபாடு செய்யவே உரிமை கிடையாது எனக் கோரி சைவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆகம மீறல்களில் ஜெயேந்திரர் ஈடுபட மாட்டார் என சங்கர மடம் பதிலளித்தது. அதன்பேரில் சைவர்கள் அவரை திருப்பணியில் பங்கேற்க அனுமதித்தனர்.
ஆகமப்படி சங்கர மடத்தைச் சேர்ந்த துறவிகள், கோயிலுக்குள்ளேயே வரக் கூடாது என்ற நிலையில், விமானம் மீது ஏறி புனித நீர் ஊற்றும் உரிமையை இவர்களாகப் பறித்துக் கொண்டனர்.
- கடந்த 2000ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறைக்குள் ஜெயேந்திரர் நுழைந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பூஜை செய்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது.
- 2004ம் ஆண்டு ஜெயேந்திரர், நெல்லையப்பர் கோயில், திருக்குறுங்குடி, பழனி உள்ளிட்ட பல கோயில்களின் கும்பாபிஷேகங்களில் ஜெயேந்திரர் தலையிட்டு தன் இஷ்டப்படி நடத்தி வைத்த சம்பவங்கள் செய்திகளாக வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
- அப்போதே அயோத்தி பிரச்னையில் தலையிட்டு நடுவராக செயல்பட ஜெயேந்திரர் மேற்கொண்ட முயற்சிகள் பல விமர்சனங்களை ஏற்படுத்தின.
- கடந்த 1950ம் ஆண்டிற்குப் பின்னர், சிதம்பரம், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில், பூந்தமல்லி வைத்தியநாத சுவாமி கோயில், சென்னை திரிசூலம் திரிபுராந்தகர் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், தஞ்சை மாவட்டம் நல்லிச்சேரி ஜம்புநாத சுவாமி கோயில், சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில், சத்தமின்றி ஆகம விரோதமாக, இந்து சமய அறநிலையத் துறை சட்டத்திற்கு விரோதமாக ஆதிசங்கரர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் நிறுவுதலுக்கு, காஞ்சி சங்கர மடத்தின் முழு ஆதரவும் ஆசியும் இருந்துள்ளது.
பல சிவன் கோயில்களில், காஞ்சி சங்கராச்சாரியார்கள் மூன்று பேரின் சுதைச் சிற்பங்கள், பிரமாண்ட ஓவியங்கள், ஆதிசங்கரரின் சுதைச் சிற்பங்கள் ஆகியவை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சத்தமின்றி திணிக்கப்பட்டுள்ளன.- செங்கல்பட்டு மாவட்டம், அம்மணம்பாக்கத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. 2022ம் ஆண்டு ஜனவரி மாதம், அந்தக் கோயிலில் நிறுவுவதற்காக காஞ்சிப் பெரியவர் சிலையை விஜயேந்திரர் வழிபட்டு ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்ததாக ஒரு செய்தி, ஜனவரி 26ம் தேதி தினமணியில் வெளியானது. அந்த சிலையை கோயிலில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் முடிந்த நிலையில் சிலை கொண்டு வரப்பட்டது. அப்போது வைணவர்கள் ஒன்று திரண்டு அதைத் தடுத்து சிலையைத் திருப்பி அனுப்பினர். வைணவ ஆகமப்படி கட்டப்பட்ட கோயிலில், அந்த ஆகமத்தை எதிர்த்த ஆதிசங்கரர் வழிவந்த காஞ்சிப் பெரியவர் சிலை வைப்பது சட்டப்படி, ஆகமப்படி தவறு என்று அவர்கள் கூறினர்.
- தஞ்சை மாவட்டம் வேப்பத்துாரில், பெருமாள் கோயில் வாசலுக்கு அருகே, அங்குள்ள பிரமாணர்கள் ஒன்று சேர்ந்து திடெீரன ஒரு சிறிய கட்டிடம் கட்டி அதில் காஞ்சிப் பெரியவர் படம் மற்றும் பாதுகையை வைத்து கும்பாபிஷேகமும் செய்து விட்டனர். அவற்றை அகற்றக் கோரி இப்போது வரை வைணவர்கள் போராடி வருகின்றனர்.
- மேலும், பல சிவன் கோயில்களில், காஞ்சிப் பெரியவர் போட்டோக்களை பக்தர்கள் மூலம் திணிக்கும் வேலையில் காஞ்சி சங்கர மடம் ஈடுபட்டு வருகிறது.
காஞ்சி சங்கர மடத்தின் அதிகார வேட்கையின் பின்னணியில் வேறு ஒரு உளவியல் தாக்கமும் உள்ளது.
ஆதிசங்கரர் திசைக்கு ஒரு மடத்தை நிறுவினார் என அவரது வாழ்க்கையை விவரிக்கும் சங்கர விஜயம் என்ற பெயருள்ள 10க்கும் மேற்பட்ட நுால்கள் கூறுகின்றன. அந்தப் பட்டியலில் தெற்கு திசையில் சிருங்கேரியில் மடம் நிறுவினார் என்று சிருங்கேரி தரப்பும், காஞ்சியில் மடம் நிறுவினார் எனக் காஞ்சி சங்கர மடத்துத் தரப்பும் கடந்த 1820ம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகின்றன.
கடந்த 200 ஆண்டுகளில் இந்த இரு மடங்களும் இதுதொடர்பாக பல்வேறு துண்டுப் பிரசுரங்களையும், நுால்களையும் வெளியிட்டுள்ளன. பரஸ்பரம் அவதுாறுகளில் ஈடுபட்டன. அதோடு நிற்காமல் நீதிமன்ற வழக்கு வரையிலும் சென்று போராடியுள்ளன. இன்றைய நிலையில், முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இருமடங்களின் சண்டை தொடர்கிறது.
தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சிருங்கேரி மடத்திற்குத் தான் சீடர்கள் அதிகளவில் உள்ளனர். அந்த மடத்தின் தரப்பு முன்பு அரசியலிலும் செல்வாக்காக இருந்தது.
எப்படியாவது சிருங்கேரியை வெல்ல வேண்டும் என்று முடிவு செய்த காஞ்சி சங்கர மடத்தின் 68, 69 மற்றும் 70வது பீடாதிபதிகள், தங்களை அதிகார மையமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்/ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கிற்குப் பின்னர் ஜெயேந்திரரின் அரசியல் தலையீடு முடிவுக்கு வந்தது.
தற்போது விஜயேந்திரர் அமைதியாக இருந்தபோதிலும், மகா பெரியவா வழிபாட்டுக் குழுக்கள், அனுஷம் டிரஸ்ட்டுகள் என்ற பெயரில் காஞ்சிப் பெரியவர் கல்ட், பெரும் நிதியுதவியின் பின்னணியில் வெகுஜன கல்ட்டாக உருவாக்கப்பட்டு வருகிறது.
முகநுால், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், காஞ்சிப் பெரியவர் பற்றிய கதைகள், சம்பவங்கள், நிகழ்ச்சிகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன.
கடந்த 2006 ம் ஆண்டு முதல், யூடியூபில், பெரியவா புராணம் என்ற பெயரில், காஞ்சிப் பெரியவருடன் இருந்தவர்கள், அவரைத் தரிசித்தவர்கள், அவரால் பலன் பெற்றவர்கள் எனப் பல தரப்பினரின் பேட்டிகளும் வெளியாகி வருகின்றன.
முக்கிய நகரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்தோ, அல்லது காஞ்சிப் பெரியவர் அனுஷம் டிரஸ்ட் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் பெயரில் சொந்தமாக வாங்கியோ, காஞ்சிப் பெரியவருக்கான சிறிய கோயில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அங்கு மாதம் தோறும் அனுஷம் நட்சத்திரத்திலும், வாரந்தோறும் வியாழக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பிராமணர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
பல இடங்களில் அனுஷம் உற்சவம் என்ற பெயரில், கடவுள்களின் வாகனங்களான காளை, கருடன் உள்ளிட்டவற்றின் மீது காஞ்சிப் பெரியவரின் படம் அல்லது உற்சவ சிலையை வைத்து ஊர்வலம் கொண்டு செல்லும் நிகழ்வுகளும் உற்சாகமாக நடத்தப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் சாய்பாபா கல்ட்டே தோற்று விடும் அளவுக்கு காஞ்சிப் பெரியவர் கல்ட், திட்டமிட்டு ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறது,
சங்கர மடத்தின் இந்த அத்தனை செயல்பாடுகளும், சிவன் கோயில்களைக் கைப்பற்றி ஒற்றை சமயத் தலைமையாக மாறி, சிருங்கேரியை வெல்ல வேண்டும் என்ற பேராசையின் விளைவு என்பதை உணர்ந்து கொண்ட சைவர்கள், முகநுாலில் இதுகுறித்து பெரிய அளவில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சைவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருவானைக்கா, ராமேஸ்வரம் போல மற்ற சிவன் கோயில்களும் பறிபோவதற்கு முன்பாகவே, பக்தர்கள் விழித்துக் கொண்டு அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
நாத்திகராகவோ ஆத்திகராகவோ இருப்பது தனிநபர் விருப்பம் என்றாலும், காஞ்சிப் பெரியவர் பெயரைச் சொல்லி பொதுமக்களிடையே ஒரு கல்ட் திட்டமிட்டு உருவாக்கப்படுவது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
காஞ்சி சங்கர மடத்தின் மீதான சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான பழியைக் கழுவத்தான் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படுவதாக பொதுவெளிகளில் விவாதங்கள் நடக்கின்றன.
இருந்தாலும் இதன் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம் இருக்கலாம் என்ற சந்தேகமும் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
எப்படியானாலும், கோயில்களைக் கபளீகரம் செய்வது, பொதுமக்களின் மூளையைச் சலவை செய்து காஞ்சிப் பெரியவரை வீடுகள் தோறும் திணிப்பது ஆகிய அத்துமீறல்கள் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் சைவ – வைணவ சமூகம் மாபெரும் ஆன்மீகப் பண்பாட்டை இழந்து, அடையாளங்களை மறந்து விழுமிய வீழ்ச்சியில் வீழ நேரிடும்.
சைவ, வைணவ அடையாளங்கள் அழிக்கப்பட்டு, ஆதிசங்கரரின் கேவலாத்வைதமே இந்து மதம் என்ற ஒற்றை மைய வாதம் பலம் பெற்று விடும்.
இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சட்ட ரீதியிலான பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கடமை, சைவ, வைணவர்களுக்கு இருக்கிறது.
——->>> மேலும் தொடர்புக்கு ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







