சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன?

மாமேதை அம்பேத்கர் விட்டதை இனி மாசிலா ஆய்வாளர்கள் தொட வேண்டும்:

சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு தானே!

இன்றைய இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் அமைந்த குழு உருவாக்கியதே ஆகும்… முன்னர் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டங்களை தொல்காப்பியர் மரபியல், கற்பியல், களவியல் ஆகிய தலைப்புகளில் அறம் பொருள் இன்பம் ஆகிவற்றுக்கான இலக்கணத்தை விவரித்தார்… இது தமிழின் தர்ம அர்த்த காம சாஸ்திரங்கள் ஆகும்… வள்ளுவரும் இதனை போதித்தார்… பிற்காலத்தில் தமிழக அற நூல்களும் போதித்தன… களப்பிரர் காலத்திற்கு பின்னாளில் சோழர் பாண்டியர்கள் காலத்தில் அவர்கள் மனுநெறி தழைக்க அரசாண்டதாக மெய்க்கீர்த்திகள் வெளியிட்டதால் தமிழகத்தில் மனு தர்மம் பிற்காலத்தில் உள்ளே வந்தது என்றும் அறிய முடிகிறது… அந்தந்த காலகட்டத்தில் எழுந்த நிகண்டுகளும் நால்வர்ணத்தையும் பிற சாதிகளையும் தெளிவாக அடுக்கி வரையறுத்தன… இதெல்லாவற்றிலும் மேல் கீழ் என்ற அடுக்குகள் இருந்தன… திருக்குறளில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற 972 ஆவது குறளில் பிறப்பால் எல்லோரும் சமமே என்றாலும் செய்கின்ற தொழிலால் வரும் வேற்றுமையினால் சிறப்பியல்பு எல்லோருக்கும் ஒத்திருப்பதில்லை என்று செய்கின்ற தொழிலால் உயர்வு தாழ்வு வருகிறது என்பதை பதிவு செய்கிறார்…

மனுவை போல பௌதாயனர், கௌதமர், ஆபஸ்தம்பர், யஞ்னவல்கியர், பதஞ்சலியின் மகாபாஷ்யத்தில் வரும் குறிப்புகள் என ஏகப்பட்ட முனிகள் – ரிஷிகள் இயற்றிய தர்ம சாஸ்திரங்களை விட ஒரு அரசனாக ஆண்ட மனு இயற்றிய தர்ம சாஸ்திரம் பிரபலமடைந்தது காலத்தின் கோலமே என்று தெரிகிறது…

இதெல்லாம் முற்காலத்தில்… இன்றைய இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பதை அம்பேத்கரிய ஸ்மிருதி என்றும் வழங்கலாம்… அல்லது அம்பேத்கரிய தர்ம அர்த்த சாஸ்திரங்கள் என்றுதான் கொள்ள வேண்டும்… இதன் அடிப்படையில் எல்லோரும் எல்லா மக்களும் சமம் என்று முன்மொழிந்தார் அம்பேத்கர்…

இந்த முடிவை தன்னிச்சையாக அவர் பிற நாடுகளில் இருந்த நடைமுறையை பார்த்து அப்படியே காப்பியடித்துவிட்டார் என்றும் இதனால் அவரை ஜெராக்ஸ் மெஷின் அம்பேத்கர் என்றும் கூட அவரை தூற்றுவாரும் உள்ளனர்… அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பை பிற நாடுகளில் இருந்ததை பார்த்து இங்கும் சமத்துவ ஜனநாயக ரீதியான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று இயற்றினார் என்றே கொண்டாலும், முன்னர் இருந்த நடைமுறையை மதிக்காமல் அப்படியே அதனை மாற்றி புதிதாக ஒன்றை உருவாக்கினால் இது பிற்காலத்தில் பல வகையான பிற்போக்கு தீவிரவாதிகளை உருவாக வழிவகுத்துவிடும் என்பது அவருக்கும் நன்கு தெரிந்திருக்கும்… இன்று நடந்து கொண்டிருப்பதும் அதேதான்…

ஆனால், புதிதாக தான் ஒன்றும் உருவாக்கவில்லை என்றும் பிராமண க்ஷத்ரிய வைஷ்ய சூத்திரர்களும், அதைவிட கீழாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களாக உள்ள தலித்துகளும் ஒரு காலத்தில் ஒரே குழுவாக, ஒரே இனமாக, ஒரே குடும்பமாக இருந்தவர்களே என்பதையும் மெனக்கெட்டு நால்வேதங்கள், அனைத்து தர்ம சாஸ்திரங்கள், இதிகாசங்கள் என அனைத்திலும் இருந்தே குறிப்புகளை எடுத்தும் intellectual ஆக ஒப்பீடு செய்தும் நிறுவினார் அம்பேத்கர்… இதனை பல்வேறு நூல்களாகவும் எழுதினார்… அந்த ஆய்வின் முடிவுகளை பல்வேறு அறிஞர்களும் அங்கீகரித்தனர்… அதன் காரணமாகத்தான் இன்று அனைவரும் சமம் என்ற சமத்துவம் பேசும் இந்திய அரசியலமைப்பு சட்டமே உருவாக்கப்பட்டது ‌… இங்கே ஒருகாலத்தில் உயர்வு தாழ்வு இல்லாத ஒரே குழுவாக இருந்த மக்களை அன்றைய காலத்திய தர்ம சாஸ்திர ஸ்மிருதிகள் வழங்கிய அரசியல் விதிகளால் தான் நால்வர்ணங்களும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தலித்துகளும் உருவாக்கப்பட்டனர் என்றும், அந்த பழைய ஸ்மிருதிகளுக்கு மாற்றாக அமைந்த இந்த நவீன இந்திய அரசியலமைப்பு ஆனது அந்த ஒரே மூலக்கூறு கொண்ட மக்களை உயர்வு தாழ்வு கற்பிக்காமல் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு சட்டத்தை வைத்து இனி அனைவரும் சமம் என்றும் நிலைநாட்டினார் அம்பேத்கர்…

எவன் ஒருவன் இன்றைய தேதியில் உயர்வு தாழ்வு பேசுகிறானோ அவன் முதலில் அம்பேத்கர் நிறுவியதை வேத இதிகாச தர்ம சாஸ்திரங்களை கொண்டே முறியடிக்க வேண்டும்… அதன் பிறகுதான் உயர்வு தாழ்வு பேசும் அருகதையே ஒருவனுக்கு வரும்… உதாரணமாக சூத்திரர்கள் அனைவரும் ஒருகாலத்தில் க்ஷத்ரியர்களாக வாழ்ந்தவர்களே என்று ஆணித்தரமாக நிறுவியவர் அம்பேத்கர்… இதனை வேந்தர் கால தொல்காப்பிய உரையாசிரியர்கள், வேந்தர் கால நிகண்டுகள், வேந்தர் கால மெய்க்கீர்த்திகள், வேந்தர் காலத்திய இலக்கியங்கள் – அதற்கான வேந்தர் காலத்திய உரைகள், தேவாரம் போன்ற வேந்தர் கால பழம்பெரும் பக்தி இலக்கியங்கள், ஆங்கிலேயர் உள்ளே வருவதற்கான இலக்கியங்கள், செப்பேடுகள், பட்டயங்கள் ஆகியவற்றைக் கொண்டே நால்வர்ணமும் ஒன்றுக்குள் ஒன்றே எனவும், அரசர்களாக / க்ஷத்ரியர்களாக வாழ்ந்தவர்கள் வீழ்ந்தபோது சூத்திரர்களாகி, உடனேயே மீண்டும் அரசர்களாகவும், வைஷ்யர்களாகவும் நிலைநிறுத்தப்பட்ட இன்றைய பெரும்பாலான வேளாள சாதியினர் என்றும் தெரிய வருகிறது… மேலும் இந்த நால்வர்ண கலப்பால் தான் பிற சாதிகள் அனைத்தும் உருவாயின என்றும் தெரிய வருகிறது மேலே குறிப்பிட்டனவற்றில் இருந்தே…

அம்பேத்கர் அவர்கள் தமிழில் உள்ள இந்த எதையும் படிக்கவில்லை என்றாலும் அவர் வடஇந்தியாவில் கிடைத்தனவற்றை வைத்தே தான் இயற்றிய அரசியலமைப்பு சட்டித்திற்கான நியாயத்தை நிறுவினார்…

தமிழகத்தில் ஈவேரா அவர்கள் க்ஷத்ரிய வைஷ்ய வர்ணங்களே இல்லை என்றும் பிராமணர் சூத்திரர் பஞ்சமர் மட்டுமே இருந்தனர் என்றும், பிராமணர்கள் சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் ஒடுக்கி தாழ்த்தினர் என்றும், திராவிடர் மொத்தமும் சூத்திரர் என்றும், சூத்திரர் என்றாலே வேசிமக்கள் என்றும் பல பொய்களை நா கூசாமல் சொன்னார்… மேல் மூன்று வர்ணத்தவர்கள் ஏழு வகையான வீழ்ச்சி காரணமாக ஏழு வகையான சூத்திரர் ஆகிறார்கள் என்று தான் மனு தர்மம் சொன்னது… ஆனால் அந்த ஏழில் ஒன்றை மட்டுமே வைத்து மொத்த சூத்திரர்களையும் வேசிமக்கள் என்றும், சூத்திரர் அல்லாத பெரும்பாண்மை வேளாளர் & பிற சாதிகளையும் சூத்திரர் என்றும் முத்திரை குத்தினார்… இதனை எல்லாவற்றையும் மேலே சொன்ன வேந்தர் காலத்திய சான்றுகளே உடைத்துவிடுகின்றன… இத்தனை பொய்களையும் ஈவேரா சொல்லியதற்கு காரணமே அவர் அன்றைய ரஷ்யாவான யூ.எஸ்.எஸ்.ஆர் க்கு சென்றபோது அங்கிருந்த சோஷியலிஸ தத்துவத்தை கண்டு வியந்ததும், அதை இங்கே நடைமுறைப்படுத்த இங்கே இருந்த மனு அரசன், தமிழ் நடைமுறையான தொல்காப்பியம், புறநானூறு 183 கூறும் நால்வர்ணம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்றும், இந்த நால்வர்ணத்தை உருவாக்கியதே பிராமணர்கள் தான் என்று அவர்கள் மேல் பழியை போட்டார்… மேலும் க்ஷத்ரிய வைஷ்ய வர்ணங்களாக இங்கே தமிழர்களும் உள்ளது / இருந்தது தெரிந்தால் அவர்கள் சோஷியலிஸத்துக்குள் வரமாட்டார்கள் என்று கருதி அந்த வர்ணங்களே இல்லை என்றும், அனைவரும் சூத்திரரென்றும், அந்த சூத்திரர் அனைவரும் வேசிமக்கள் என்றும் சொன்னால்தான் மதம் சாதி ஆகியவற்றை இழிவு என்று கருதி தூக்கி எறிவார்கள் என்றும் கருதி இப்படி பொய் சொன்னார்… மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடாகத்தான் இருக்குமேயன்றி சோஷியலிஸ நாடாக இருக்காது என்பதால் திராவிடர்களுக்கு இந்தியாவே வேண்டாம் ஆனால் தனி திராவிட நாடு வேண்டும் என்று போராடும் அளவுக்கு சோஷியலிஸ தீவிரவாதியாக திகழ்ந்தார் ஈவேரா… அதனால் ஈவேரா போன்றோர் உளறியதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையே இல்லை… அவர் பொய்களே அவரை வீழ்த்திவிட்டன…

அம்பேத்கர் அவர்கள் மேல் மூன்று வர்ணங்களும் அவை வீழ்ந்து உருவான சூத்திரர்களும், இந்த நால்வர்ணத்தில் இருந்து உருவான தலித்துகளும் என நிறுவியதில் சில குறைகள் இருக்கின்றன… தலிதம் என்றால் மகாராஷ்ட்ர மொழியில் சிதைந்த உடைக்கப்பட்ட என்ற பொருள்… அதன் வழியில் நால் வர்ணமாக இருந்தவர்களில் ஒருசாராரை பிற்காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பிற நால்வர்ணத்தவர்கள் ஒடுக்கி தாழ்த்திவிட்டனர் என்றும் அவர்களுக்கு தான் தலித் என்றும் தனது அரசியலமைப்பில் ஒரு பதம் வரைந்தார் அம்பேத்கர்… ஏன் நால்வர்ணத்தவர்கள் தங்களுக்குள்ளாக ஒன்றோடு ஒன்றாக இருந்தவர்களை அவர்களே ஒடுக்கினார்கள் என்பதற்கு ஒரு சில தரவுகளை வைத்து பிராமணியத்துக்கும் பௌத்த மதத்திற்கும் நடந்த சண்டையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த நால்வர்ணத்தவர்களை இப்படியாக ஒடுக்கிவிட்டனர் என்று கூறுகிறார்… இதன் காரணமாகவே இன்றைய தலித்தியவாதிகளான அம்பேத்கரியவாதிகள் பெரும்பாலும் தாங்கள் பௌத்தர்களாக இருந்தவர்கள் என்றும் தலித் சமுதாயத்தைச் சார்ந்த படங்களை உருவாக்கும் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் புத்தர் சிலையை படத்தில் அவர்கள் இடத்தில் இருப்பது போன்றும் காட்டுவார்கள்… புத்தர் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தியவர்… பௌத்தர்களாக இருந்து அதில் இருந்து பிராமணிய மதங்களுக்கு மாறமாட்டேன் என்று உறுதியாக நின்றவர்கள் தான் தலித்துகள் என்றால் , தலித்துகள் ஏன் மாட்டிறைச்சி, பன்றிக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் கருவாடு போன்றவற்றை பாரம்பரியமாக உண்கிறார்கள் என்ற கேள்வி அவரது வாதத்தை தவிடுபொடியாக்கும்… இந்த கேள்வியை அன்று கேட்டாரும் இல்லை, இன்று கேட்பாரும் இல்லை… அப்படியானால் நால் வர்ணத்தில் இருந்துதான் பிற சாதிகள் தோன்றின என்று கூறும் தமிழகத்து வேந்தர் காலத்திய சான்றுகளும், வடக்கத்திய சான்றுகளும் சொல்வதை மறுப்பதற்கும் இடமில்லை, ஆனால் தலித்துகள் நால்வர்ணத்தில் இருந்து தாழ்ந்தவர்கள் ஒடுங்கியவர்கள் என்று இருந்த வரலாறையும் மறுப்பதற்கும் இடமில்லை…

ஆக இப்படித்தான் இந்த ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிதுக்கப்பட்ட கதையில் இருந்துதான் தலித்தியவாதிகளுக்கு ஒருவித காழ்ப்புணர்வு பிறக்கிறது, தங்கள் முன்னோர்களை ஒடுக்கிவிட்டனர் தாழ்த்திவிட்டனர் மேல் சாதியினர் என்று நம்புவதால் வரும் ஒரு வெறுப்புணர்வின் காரணமாக… இதுதான் சாதிய சண்டைகளுக்கும் கலவரங்களுக்கும் இன்னொரு முக்கியமான காரணியாக இருக்கும் ஒரு மூல விஷயம்…

ஏன் தலித்துகள் முற்காலத்தில் நால்வர்ணத்தில் இருந்து தாழ்ந்தனர் ஒடுங்கினர் என்ற விஷயத்தில் மட்டும் அம்பேத்கர் உண்மையை நன்கு ஆராயாமல் தவறிழைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது… வடக்கே எப்படி இருந்தது என்பது நமக்கு தெரியாது… ஆனால் தமிழகத்தில் யாரும் யாரையும் ஒடுக்கவும் இல்லை தாழ்த்தவும் இல்லை என்ற வரலாற்றை, அம்பேத்கர் விட்ட அந்த குறையை இனி நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் தொட வேண்டும்… இந்த வரலாறு வெளிவந்தால்தான் இனிமேல் சாதிய சண்டைகள் வராமல் தடுத்தொழிக்க முடியுமே அன்றி வேறில்லை…

 

கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் 

கொங்கு வேளாளர் 

ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர் 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம்

சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை

9629908758  

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *