நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா?

யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள்.

சம்பவம் 1:

திருவையாறு அருகே உள்ளது அரசூர் கிராமம். இங்கு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நமது மதிப்பிற்குரிய நா. விச்வநாதன் அவர்களின் தாத்தா வெங்கட்ராமக் குருக்கள் அர்ச்சகராக இருந்தார். அப்போது அக்கோயில் தரிசனத்திற்காக காஞ்சிப் பெரியவர் அங்கு சென்றார். கோயிலுக்குள் நுழைந்து சந்நிதிக்குள்ளும் பாதுகையுடன் சென்றார். அதைப் பார்த்துக் கோபமடைந்த வெங்கட்ராமக் குருக்கள், ‘வெளியே போயா’ எனப் பலர் முன்னிலையிலும் ஒருமையில் சத்தம் போட்டார். பெரியவர் வெளியேறி விட்டார். இது நடந்தது 1924க்கு முன்பு.

சம்பவம் 2:

திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்குப் பெரியவர் தனது பல்லக்கில் சென்றார். அவ்வாறு சென்றவர் கோயில் ராஜகோபுரம் வரையில் நிற்காமல் மேனா பல்லக்கிலேயே பாதுகையுடன் கொடிமரம் வரையிலும் சென்றிருக்கிறார். அதைப் பார்த்து கோபமடைந்த கோயில் ஆதிசைவர்கள். அதற்கு மேலும் உள்ளே செல்லவிடாமல், அங்கே வரிசையாக நின்று தடுத்து விட்டனர். அதனால் வேறு வழியின்றி, பெரியவர் பல்லக்கில் இருந்து கீழே இறங்கி கோயிலில் இருந்து வெளியேறி, தர்மசம்வர்த்தினியை மட்டும் தரிசித்து விட்டு சென்று விட்டார். இது நடந்தது 1925 – 1930ம் ஆண்டுகளில்.

சம்பவம் 3:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தங்கத் தேர் செய்யப்பட்டது. இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நாளன்று, விஜயேந்திரர் வந்து தேர் வடம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. விஜயேந்திரர் கோயிலுக்குள் நுழைந்த போது, அன்று முறைகாரராக இருந்த சிவாச்சாரியார் ஒருவர், விஜயேந்திரரை நோக்கி ஒருமையில் திட்டி வெளியே போகும்படி கத்தினார். வேறு வழியின்றி விஜயேந்திரரும் வெளியில் சென்று விட்டார். பின்னர் அன்றைய அறங்காவலர் குழுத் தலைவர், முறைகார பட்டர் உள்ளிட்டோர் வடம்பிடிக்க தங்கத்தேர் சமர்ப்பண நிகழ்ச்சி நடந்தது. இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த ஒருவர் என்னிடம் கூறியது இது.

இந்த சம்பவங்களில் இருந்து நாம் அறிந்து கொள்வது: பாதுகையுடன் கோயிலுக்குள்ளே சென்றது; பல்லக்கிலேயே கோயிலுக்குள்ளும் செல்ல முயன்றது, சங்கராச்சாரியார்கள் கோயிலுக்குள் வருவது சாஸ்திரத்தால் தடை செய்யப்பட்டதை ஆதிசைவர்கள் அறிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்த முயன்றது.

இப்படிப் பல கோயில்களிலும் அவர்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஏன்? தங்கள் எல்லையை அவர்கள் மீறிய போது. ஆனால் அவர்கள் தங்களது ஆலய விஜயங்களில் உண்மையை மறைத்துப் பதிவு செய்து ஆவணமாக்கியது போல், இங்கே, அவர்கள் எல்லை மீறி செய்த சம்பவங்கள், அத்துமீறல்கள் சைவர்களாலும் ஆதிசைவர்களாலும் ஆவணப்படுத்தப்படவில்லை. அதனாலேயே இப்போது எதிர்ப்பதிலும் பல சிக்கல்கள் உருவாகின்றன. இன்றும் அந்த எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

முதல் இரண்டு சம்பவங்களைக் கேள்விப்பட்ட போது நானும் நம்பவில்லை. ஒரு துறவி இப்படி செய்வாரா என்று. ஆனால் சிவத்திரு. நா. விச்வநாதன் அவர்களின் தாத்தாவுக்கு இப்படி ஒரு அனுபவம் நேர்ந்திருப்பதாலும், திருவையாற்றில் பெரியவரைத் தடுத்த குழுவைச் சேர்ந்த குருக்கள், நடந்தது உண்மை தான் என்று கூறியதாலும் நம்ப முடிகிறது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களைப் போல, 1926ம் ஆண்டு சங்கரநயினார் கோயில் சங்கரலிங்க சுவாமி கோயிலில் அப்படியே நடந்திருப்பதை, ஈ.வெ.ரா. வும் தனது குடியரசு இதழில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் அந்த சங்கராச்சாரியார் யார் என ஈ.வெ.ரா. கூறவில்லை. (காஞ்சியார் இல்லை என்று மட்டும் தெரிகிறது) ஈ.வெ.ரா. பதிவு செய்ததாலேயே இந்த சம்பவங்கள் நடக்கவே இல்லை என்று குற்றம்சாட்டுவது, நீ பிராமண விரோதி என உளறுவது அநியாயம்.

பெரியவர் பல்லக்கை அன்றே ஒழித்து விட்டார் என்று மார்தட்டும் ஒரு தரப்பினருக்கு இன்னொரு செய்தி: இப்போது பீடாதிபதியாக இருப்பவரும் மேனா பல்லக்கில் சென்ற புகைப்படங்கள் உள்ளன. உங்களவர்களிடம் கேட்டால் கிடைக்கும். நெருக்கி கேட்டால் அது ஒரு சம்பிரதாயம் அவ்வளவுதான். இன்று நடைமுறையில் இல்லை என்பார்கள்.

இங்கே நான் சொல்ல வருவது: சங்கர மதத்தவர், சந்நியாசியோ இல்லறத்தவரோ ஒருநாளும் கோயில்களை மதித்ததில்லை. ஏனென்றால் அவர்கள் தத்துவப்படியும் நடைமுறைப்படியும் கோயில்கள் தேவையில்லை.

அதனாலேயே இன்று வரை, அவர்களில் வேதம் படித்தவர்கள், சிவாலயங்களில் சந்நிதிக்குள் செல்லாமல் வாசலில் நின்று நெஞ்சில் ஒற்றைக் கை வைத்து தொட்டு விட்டு சென்று விடுவார்கள். அடியார்களைப் போல இருகைகளையும் தலைக்கு மேலே கூப்பி வணங்க மாட்டார்கள். உள்ளே சென்றால், ஆதிசைவர் கைகளால் திருநீறு வாங்க வேண்டும்; அந்தத் திருநீறும் ஆதிசைவர்களும் அவர்களால் நிராகரிக்கப்பட்டவை.

1920களில் காங்கிரஸ் கட்சி விடுதலைப் போராட்டத்தை முழு வீரியத்தில் தொடங்கியபோது, கோயில்கள், அரசியல்வாதிகளின் மையங்கள் ஆகின. அப்போது ஆங்கிலம் படித்த ஸ்மார்த்த பிராமணர்கள் அரசியலில் செல்வாக்காக இருந்ததால் அவர்களும் கோயில்களைப் பயன்படுத்தினர். எனவே இவர்களின் பார்வையும் முழுமையாக கோயில்கள் பக்கம் திரும்பியது. அதுதான் பிற்பாடு ஆன்மீக அரசியலுக்கு கொண்டு சென்றது.

#சைவம்
#சைவசித்தாந்தம்
#சைவர்கள்
#சிவாலயங்கள்
#எதிர்ப்பு
#ஸ்மார்த்தஅரசியல்
#ஸ்மார்த்தம்
#சங்கராச்சாரியார்
#பெரியவர்
#திருவையாறு
#குருக்கள்

கட்டுரையாளர் மற்றும்  எழுத்தாளர் : 

நெல்லை சொக்கர் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் 

சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 

9629908758  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *